×

அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு: வீட்டில் உள்ளவர்களின் கை, கால்களை கட்டி 20 சவரன் நகை, வெள்ளி, பணம் கொள்ளை

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே வீட்டில் இருந்த அனைவரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை குரங்கு குல்லா கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பினர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே கடமலைபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கஜவரதன் (70). இவரின் மனைவி லட்சுமிபாய் (68). இவர்களது மகன் ஜெகநாதன் (45). இவரின் மனைவி ஹேமலதா (40). இவர்களது மகன் கவின் (16). கூட்டு குடும்பமாக வசித்துவரும் இவர்கள், நேற்றிரவு வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென 10க்கும் மேற்பட்டவர்கள் மங்கி குல்லா அணிந்து வீட்டுக்குள் புகுந்தனர்.

இவர்களை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் திருடன் என்று கூச்சலிட்டனர். இதனால் கோபம் அடைந்த மர்ம நபர்கள், கஜவரதன் உள்பட அனைவரின் கை, கால்களை கட்டிப் போட்டுவிட்டு அனைத்து அறைகளிலும் புகுந்து நகை, பொருட்களை தேடினர். ஒரு படுக்கை அறையில் உள்ள 2 பீரோக்களை உடைத்து அதில் வைத்திருந்த செயின், மோதிரம், வளையல், மாங்கல்ய தங்கச்சங்கிலி உட்பட 20 சவரன் நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர். முன்னதாக வீட்டுக்குள் புகுந்த திருடர்கள், அறைகளில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு டிவியை அதிக சத்தத்துடன் வைத்துள்ளனர். பின்னர் அனைவரின் கை, கால்களை கட்டிப்போட்டுள்ளனர். இதனால் கொள்ளை நடப்பது பக்கத்து வீட்டுக்காரர்கள் யாருக்கும் தெரியவில்லை.

பொருட்களை கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்த திருடர்கள், வீட்டின் கேட்டை பூட்டி அதன் சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். இதன்பிறகு கஜவரதன் தனது வாயால் கை கட்டுக்களை அவிழ்த்துவிட்டு பின்னர் ஒவ்வொருவரின் கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கட்டுக்களை அவிழ்த்துவிட்டுள்ளார். இதன்பின்னர் அவர்கள் கொடுத்த தகவல்படி, அச்சிறுப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்துள்ளனர். வீட்டின் கதவு, பீரோவில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளை நிபுணர்கள் வந்து பதிவு செய்தனர்.

முகமூடி அணிந்துவந்த கொள்ளையர்கள், வீட்டில் உள்ள அனைவரின் கை, கால்களை கட்டிப்போட்டு பணம், நகை கொள்ளையடித்து சென்றிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பேராசிரியர் கார்த்திகேயன் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதில்,  தொடர்புடைய நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

Tags : Jewelry, silver, money, robbery
× RELATED 3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை,...