×

சசிகலா மீது அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரை எழுத்துபூர்வமாக விளக்கம் அளிக்க மாம்பலம் காவல் ஆய்வாளருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சசிகலா மீது அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து எழுத்துபூர்வமாக விளக்கம் அளிக்க மாம்பலம் காவல் ஆய்வாளருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளர் என தொடர்ந்து சசிகலா தன்னை பிரகடனப்படுத்தி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க மாம்பலம் காவல்நிலைய போலீசாருக்கு அறிவுறுத்துமாறு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கட்சிக்கு உரிமை கோரிய சசிகலாவின் மனுவை தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அளித்த தீர்வை சசிகலா மதிக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அம்மனுவில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்க சைதாப்பேட்டை 17- வது நிதித்துறை நடுவர் கிருஷ்ணன் அதிமுக சார்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். மேலும் இது குறித்து வருகின்ற 20 ஆம் தேதி எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் மாம்பலம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.       


Tags : Saidapet court ,Mambalam ,AIADMK ,Sasikala , Sasikala, AIADMK, Complaint, Written, Interpretation, Mambalam Police Inspector, Saidapet Court
× RELATED திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா...