சென்னை: நடிகை குஷ்புவை தொடர்ந்து பாஜ இளைஞர் அணி தலைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுத்திய பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்தும், உடனடியாக பஞ்சாப் முதல்வர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜ இளைஞர் அணி சார்பில் தங்கசாலையில் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடந்தது. இதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜ தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ் சூர்யா எம்பி, தமிழக பாஜ இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
இதேபோல பட்டினப்பாக்கத்தில் பாஜ சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜ தேசிய பொது செயலாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி மற்றும் நடிகை குஷ்பு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற நடிகை குஷ்புக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட்டது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் பங்கேற்ற பாஜ இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வத்துக்கும் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து டாக்டர்கள் அறிவுரையின்பேரில் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இதேபோல சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்படுவதால், போராட்டத்தில் பங்கேற்ற பாஜ நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.