×

கேரளாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிரபல நடிகை 5 ஆண்டுகளுக்கு பின் அறிக்கை!: பாதிப்பில் இருந்து மீண்டு நீதிக்காக போராடியது பற்றி உருக்கம்..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிரபல நடிகை 5 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்துள்ளார். பாதிப்பில் இருந்து மீண்டு நீதிக்காக போராடியது எளிதான பயணம் அல்ல என்று நடிகை கூறியுள்ளார். 2017ம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்து கொச்சிக்கு திரும்பிய போது பிரபல மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இதில் நடிகை திலீப்பிற்கு தொடர்பு இருப்பது உறுதியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடிகை கருத்து கூறாமல் மௌனமாக இருந்தார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை நடிகர் திலீப் லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றதாக புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு பாதிக்கப்பட்ட நடிகை மனம் திறந்து தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாதிப்பில் இருந்து மீண்டு வந்து நீதிக்காக போராடியது எளிதான பயணம் அல்ல என்று நடிகை கூறியுள்ளார். தனக்கு ஏற்படுத்தப்பட்ட கலங்கத்தால் 5 வருடங்களாக தனது பெயரும், தனது அடையாளமும் நசுக்கப்பட்டு வருவதாக நடிகை வேதனை தெரிவித்துள்ளார்.

குற்றம் செய்தது தான் இல்லை என்றாலும் தன்னை அவமானப்படுத்தவும், அமைதியாகவும், தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடந்ததாக கூறியுள்ளார். ஆனால் அப்படிப்பட்ட சமயங்களில் தன் குரலை உயிர்ப்பிக்க முன்வந்த சிலரை தான் பெற்றிருப்பதாகவும், இப்போது தனக்காக ஒலிக்கும் பல குரல்களை கேட்கும் போது இந்த யுத்தத்தில் தான் தனியாள் இல்லை என்பதை உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். உடன் நின்ற அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி என்றும் அந்த அறிக்கையில் நடிகை குறிப்பிட்டுள்ளார். இதனிடையே புதிய வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகர் திலீப் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


Tags : Kerala , Kerala, Sex, Actress, Report
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...