கோவை : கோவை மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்புகள் விற்பனைக்கு வந்துள்ளது.தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பொங்கல் பானை விற்பனை, பொங்கல் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. எம்ஜிஆர் மார்க்கெட்டிற்கு கரும்புகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவை, மதுரை, மனப்பாறை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ளன. 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டன.
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக கரும்பு விற்பனை எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை என கரும்பு வியாபாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ”இந்த ஆண்டு பருவமழையின் காரணமாக கரும்பு சாகுபடி நன்றாக இருந்தது. பொங்கலுக்கு அரசு சார்பில் ரேசன் கடைகளில் கரும்புகளை விநியோகித்துள்ளனர்.இருப்பினும், பொதுமக்கள் வீடுகளுக்கும், நிறுவனங்களின் பயன்பாட்டிற்காகவும் கரும்புகளை வாங்குவார்கள் என விற்பனையை துவங்கியுள்ளோம். அரசின் கட்டுபாடுகள் காரணமாக வியாபாரம் பாதிக்க வாய்ப்பு உள்ளது. அது தொடர்பாக சரிவர கணிக்க முடியவில்லை” என்றனர்.