கூடலூர் : தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு, இரவு 10 மணிமுதல் காலை 5 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கும் அமல்படுத்தி உள்ளது. ஞாயிறன்று மதுபான கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூடலூரில் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக பலர் அரசு மதுபான கடையில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிச்செல்வதாக கூடலூர் இன்ஸ்பெக்டர் முத்துமணிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் கூடலூர் பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த கூடலூரைச் சேர்ந்த சுரேஷ்குமார்(47), ஜெயக்குமார்(49) இருவரையும் பிடித்து அவர்கள் வைத்திருந்த சாக்குப்பைகளை சோதனையிட்டனர். அதில் 200 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமார், ஜெயக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.