நாகை: நாகை மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் 465 ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் விழா வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று இரவு நாகை யாஹுஸைன் பள்ளி வாசலிலிருந்து சந்தனக் கூடு ஊர்வலம் தொடங்கி மறுநாள் அதிகாலையில் நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதை ஒட்டி நாகூர் ஆண்டவர் சந்நிதி பின்புறம் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து சந்தனம் அரைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசின் சார்பில் 45 கிலோ சந்தன கட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. விழாவின் நிறைவாக சந்தனம் பூசும் நிகழ்வு நிறைவடைந்தவுடன் அந்த சந்தனம் பிரசாதமாக வழங்கப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக சந்தனம் பூசும் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.