திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி மாதத்துக்குள் வழக்கை முடிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது செல்போனில் எடுக்கப்பட்ட காட்சிகள் நடிகர் திலீப்பிடம் இருக்கிறது. அவர் அந்த காட்சிகளை பார்த்தது தனக்கு தெரியும் என்று திலீப்பின் நண்பரும், இயக்குனருமான பாலச்சந்திரகுமார் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி கோரி, போலீஸ் தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நீதிபதி கவுசர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல், இந்த வழக்கில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. ஆகவே, சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இதற்கு திலீப் தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து அவர், போலீஸ் தரப்பு விசாரணையின்போது ஏற்பட்ட தவறுகளை சரிகட்டுவதற்காகவே மீண்டும் விசாரணை நடத்த சொல்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள இந்த புதிய பிரச்னைகளுக்கு விசாரணை அதிகாரியான டிஎஸ்பி பைஜூ பவுலோஸ்தான் காரணம் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கவுசர், அரசு வக்கீலிடம், இந்த வழக்கில் சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்துவது, விசாரணையை முடிக்க காலதாமதம் ஏற்படாதா என்று கேள்வி எழுப்பினார். அதுபோல் திலீப் தரப்பு வக்கீலிடம், சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்துவதால் உங்களுக்கு என்ன பிரச்னை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து இந்த மனு மீதான தீர்ப்பை பிறகு அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இதற்கிடையே போலீசிடம் பாலச்சந்திரகுமார் கூறிய சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகளின் சத்தம் குறைவாக இருந்தது. அதில் யார் யார் என்னென்ன பேசுகிறார்கள் என்பது தெளிவாக இல்லை. இதனால் சத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று திலீப் விரும்பினார். இதையடுத்து கொச்சியிலுள்ள ஒரு ஸ்டுடியோவுக்கு கொண்டு சென்று, ஒரிஜினல் சத்தத்தைவிட 20 மடங்கு அதிகரிக்கப்பட்டது. அதற்கு பிறகுதான் திலீப் அந்த வீடியோவை பார்த்தார் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.