திருவனந்தபுரம்: பிரபல நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட செல்போன் காட்சியில் சத்தம் குறைவாக இருந்ததால், அதை 20 மடங்கு அதிகரிக்க செய்து நடிகர் திலீப் பார்த்ததாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி மாதத்திற்குள் இந்த வழக்கை முடிக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட போது செல்போனில் எடுக்கப்பட்ட காட்சிகள் நடிகர் திலீப்பிடம் உள்ளது. அவர் அந்த காட்சிகளை பார்த்தது தனக்கு தெரியும் என்று நடிகர் திலீப்பின் நண்பரும், டைரக்டருமான பால சந்திரகுமார் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி கோரி போலீஸ் தரப்பில், கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கவுசர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல், இந்த வழக்கில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளது. ஆகவே சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.
இதற்கு திலீப் தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து அவர், போலீஸ் தரப்பு விசாரணையின்போது ஏற்பட்ட தவறுகளை சரிகட்டுவதற்காகவே மீண்டும் விசாரணை நடத்த கூறுகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள இந்த புதிய பிரச்னைகளுக்கு விசாரணை அதிகாரியான டிஎஸ்பி பைஜூ பவுலோஸ் தான் காரணம் என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கவுசர், அரசு வக்கீலிடம் இந்த வழக்கில் சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்துவது, விசாரணையை முடிக்க காலதாமதம் ஏற்படாதா? என்று கேள்வி எழுப்பினார். அதேபோல் திலீப் தரப்பில் வக்கீலிடம், சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்துவதால் உங்களுக்கு என்ன பிரச்னை? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இந்த மனு மீதான தீர்ப்பை பின்னர் அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இதற்கிடையே போலீசிடம் இயக்குனர் பாலசந்திர குமார் கூறிய சில திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகளின் சத்தம் குறைவாக இருந்தது. அதில் யார்? யார்? என்னென்ன பேசுகிறார்கள் என்பது தெளிவாக இல்லை. இதனால் சத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று திலீப் விரும்பினார். இதையடுத்து கொச்சியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் கொண்டு சென்று ஒரிஜினல் சத்தத்தைவிட 20 மடங்கு அதிகரிக்கப்பட்டது. அதன் பின்னர் தான் திலீப் அந்த வீடியோவை பார்த்தார் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.