நாகர்கோவில்: கலெக்டர் அலுவலகம் அருகே குழாய் உடைந்து சாலையில் குடிநீர் வீணாக செல்கிறது. நகர்கோவில் மாநகர பகுதிக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் போடப்பட்ட குடிநீர் குழாய்கள் என்பதால் தண்ணீர் அழுத்தத்தால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் உடைப்பை சரி செய்து மீண்டும் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து குடிநீர் சாலையில் ஓடுகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது ஆனால் இதுவரை அதை சரி செய்யவில்லை. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.