குன்றத்தூர்: குன்றத்தூரில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, மக்களின் குறைகள் தொடர்பான மனுக்களை பெற்று, அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தமிழக சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சார்பில், நேற்று குன்றத்தூர் நகராட்சி அலுவலகம் அருகே மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இதில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று, தங்களது குறைகளை புகார் மனுக்களாக அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கினர்.
இம்முகாமில் அமைச்சர் தாமோ.அன்பரசன் பேசுகையில், குன்றத்தூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு, இன்று திமுக அரசு பொறுப்பேற்றதும் நிறைவேறி உள்ளது. இதன்மூலம் சென்னையை போலவே, நமக்கும் விரைவிலேயே பாதாள சாக்கடை திட்டம், மெட்ரோ வாட்டர், தரமான சாலை வசதிகள் படிப்படியாக கிடைக்கும். தற்போது கொரோனா மூன்றாம் அலை வேகமாக பரவி வருகிறது என நமது சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால், நாம் மட்டுமின்றி நம் வீட்டின் அருகே வசிக்கும் அனைவரையும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் வாங்கிய சுமார் ரூ.2500 கோடி கடனை தள்ளுபடி செய்ததும் திமுக அரசுதான். நாங்கள் தேர்தலின்போது கூறிய 500 வாக்குறுதிகளில், இதுவரை 300க்கும் மேற்பட்டவற்றை நிறைவேற்றி, மக்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழக முதல்வருக்கும் இந்த அரசுக்கும் பொதுமக்களாகிய நீங்கள்தான் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.