புதுடெல்லி: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘ஒன்றிய அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே நேரடியாக பணிக்கு வர வேண்டும். மற்றவர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றலாம். ஊழியர்களில் மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு அலுவலகத்தில் நேரடியாக வருவதற்கு விலக்கு அளிக்க வேண்டும். பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்.
ஒரே நேரத்தில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதால் கூட்டம் ஏற்படுவதை தவிர்க்க, காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் என இரு பணி நேரங்களை பின்பற்ற வேண்டும். வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி, இணைய வசதிகளை எந்நேரத்திலும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. இவை, வரும் 31ம் தேதி வரை அமலில் இருக்கும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.