கடலூர்: கடலூரில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கும் பணியும் தீவிரமடைந்துள்ளது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக மீண்டும் தமிழகம் பல்வேறு கட்டுப்பாடுகளை தற்போது சந்திக்க தொடங்கியுள்ளது. இப்பெருந்தொற்றை தடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, இந்த ஒமிக்ரானால் பெரும் பாதிப்பு இல்லை என்றாலும் அதன் பரவல் என்பது அதிகரிக்க கூடும் என்று சுகாதாரத்துறை அறிவிப்பின் அடிப்படையில், முகக்கவசம் தான் அதற்கான முதல் பாதுகாப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை என்பது பாய தொடங்கி விட்டது. முதல் முறை எச்சரிக்கையாகவும், அதன் பிறகு அபராதமாகவும் விதிக்கப்பட்டது. தற்போது கடலூர் காவல்துறை ஒட்டுமொத்தமாக கடலூர் மாவட்டம் முழுவதும் பிரதான சாலைகளில் நின்று முகக்கவசம் அணியாதவர்களிடத்து முதற்கட்டமாக எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு, பின் அணியாமல் வருபவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட முதல் அலை தொடங்கி இதுவரை கடலூர் மாவட்டம் முழுவதும் 1,51,662 பேர் மீது அபராதம் விதிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ரூ. 3.15 கோடி வசூலிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த 3- வது அலை தடுக்கவேண்டும் என்ற நோக்கில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் வரைக்கும் அபராதம் என்பது வசூலிக்கப்படுகிறது. இந்த அபராதம் வசூலிக்க முக்கிய காரணம, பொதுமக்களுக்கு காவல்துறையினர் ஏற்கெனவே விழிப்புணர்வு மற்றும் துண்டறிக்கை மூலம் , வெளிப்படையாக கூறியும் தெரிவித்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் சுற்றி கொண்டிருப்பதால், காவல்துறையினர் ஆங்காங்கே குவிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக அனைத்து வாகனங்களையும் கண்காணிக்கின்றனர்.
அதில் யார்யார் முகக்கவசம் அணியவில்லையோ அவர்களுக்கு முதற்கட்ட நடவடிக்கையாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதே சமயம் ஓட்டுநர், நடத்துனருக்கும் அறிவுறுத்தல் வழங்குகிறது. சுகாதாரதுறையுடன் சேர்ந்து காவல்துறையும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.