வேலூர் : எனது மகள் கணவனுடன் சேர்ந்து சொத்துக்களையும் பணத்தையும் பறித்துக்கொண்டு தாக்கி மிரட்டல் விடுகின்றனர். பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மூதாட்டி மனு அளித்தார்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், நாங்கள் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் நிலம் தனி நபர் ஒருவரால் தானமாக வழங்கப்பட்டது. இந்த இடத்திற்கு கடந்த 30 ஆண்டுகளாக பட்டா கேட்டு வருகிறோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் கழிவறை இல்லை. இதனால் பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே எங்கள் பகுதியில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும். எங்கள் வீடுகளுக்கு பட்டா வழங்கவேண்டும். இதில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநகராட்சி தேர்தலை புறக்கணிப்போம் என தெரிவித்தனர்.
வேலூர் சாஸ்திரி நகரை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்த மனுவில், நாங்கள் அனைவரும் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடிசை மாற்றுவாரியம் சார்பில் வழங்கப்படும் வீட்டை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.விரிஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளம் சென்றபோது காமராஜர்புரத்தில் இருந்த 18 வீடுகள் அடித்துச்சென்றது. இதுகுறித்து விசாரிக்க சென்ற ேக.வி.குப்பம் தாசில்தாரை தாக்கியதாக அதே பகுதியை சேர்ந்த மனோஜ்குமார், அலிபாபா ஆகியோர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அலிபாபாவின் நேற்று தனது உறவினர் மற்றும் ஊர்மக்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், எனது கணவர் தாசில்தாரை தாக்கவில்லை. அவரை விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார்.காட்பாடி அடுத்த கன்னிகாபுரத்தை சேர்ந்த மூதாட்டி சின்னபாப்பம்மாள் அளித்த மனுவில், ‘என்னுடைய 2வது மகள் தனலட்சுமி, அவரது கணவருடன் சேர்ந்து, பணம், சொத்துகளை பறித்து கொண்டு, என்னை தாக்கி மிரட்டி வருகின்றனர். என்னைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என தெரிவித்தார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ₹3.25 லட்சம், சக்கர நாற்காலி, செயற்கை உபகரணங்கள் என மொத்தம் ₹72 ஆயிரத்திற்கான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.