×

பெண் சிசு கொலை தடுக்க தனிக்குழு: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி

மதுரை: ‘‘பெண் சிசு கொலைகளை தடுக்க தனிக்குழு அமைக்கப்படும்’’ என மதுரையில் சமூக பாதுகாப்புத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். மதுரையில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ், மண்டல துணை இயக்குநர் அலுவலக திறப்பு விழா இன்று நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இந்த அலுவலகம் மூலம், 19 மாவட்டங்களை சேர்ந்த குழந்தைகள் சம்பந்தமான பிரச்னைகள் குறித்த புகார்கள் மீது நேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து சமூக பாதுகாப்புத்துறை விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு முதல்வர் அறிவித்துள்ள 1098, 1091, 144, 181 ஆகிய 4 டோல் ப்ரீ எண்களுக்கு வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு கடுமையான சட்டமும், தண்டனையும் இருக்கிறது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இந்த சட்டத்தை சரிவர செயல்படுத்தவில்லை. தற்போது மேற்கண்ட சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக நிறைய புகார்கள் வருகின்றன. இதற்கு தீர்வு காணப்படும்.

ஆண் குழந்தை, பெண் குழந்தை என பெற்றோர்கள் பாரபட்சம் பார்க்கக்கூடாது. உசிலம்பட்டியில் பெண் சிசு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தனிக்கவனம் எடுத்து விசாரணை நடத்தப்படும். பெண் சிசுக்கொலைகள் அதிகம் பதிவாகியுள்ள உசிலம்பட்டி பகுதியில் சிசுக்கொலைகளை தவிர்க்க காவல்துறையுடன் இணைந்து தனிக்குழு அமைத்து விழிப்புணர்வு செய்து கண்காணிக்கப்படும் என்றார்.

Tags : Minister ,Keidajivan , Special committee to prevent female infanticide: Interview with Minister Geeta Jeevan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...