×

திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்தது

சென்னை: சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்டிடம் இடிந்து விழுந்தது. 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்தது. காலையில் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு சற்று சரிந்திருந்த நிலையில் குடியிருப்புவாசிகள் அனைவரும் வெளியேறினர். அனைவரும் பத்திரமாக வெளியேறிய நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் யாருக்கும் காயம் இல்லை.

சென்னை திருவொற்றியூர் அருகேயுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பு இன்று காலை திடீரென்று சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குடிசைமாற்று குடியிருப்பானது 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 331 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில் ஒரு பகுதியாக தனியாக கட்டிடம் இருந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை கட்டிடத்தில் திடீரென்று விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசல் அதிகமாவதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.

வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறிய நிலையில் அருகில் இருந்த மக்கள் ஆபத்தை உணராமல் வீட்டின் அருகே இருந்ததாலும் விரிசல் அதிகமாவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியே கூச்சலிட்டு அவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். கட்டிடமானது விரிசலுடன் சற்று சாய்ந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் கட்டிடமானது திடீரென்று சரிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்துள்ளன. யாருக்கும் காயங்கள் இன்றி அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

கட்டிடமானது ஏற்கனவே விரிசல் ஏற்பட்டு பழுதடைந்த நிலையில் இருந்ததால் இதன் கட்டிடத்தை சீரமைப்பது குறித்து பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இந்த கட்டிடத்தை புதுப்பித்து தருவதற்காக மனுக்கள் அளித்துள்ள நிலையில் இதுவரை இந்த கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து யாரும் ஆய்வு செய்யவில்லை. இந்நிலையில் இந்த கட்டிடமானது இடிந்து விழுந்துள்ளது. இதுகுறித்து தற்போது காவல்துறை அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்புத்துறையா அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். அடுக்குமாடி கட்டிடமானது திடீரென்று இன்று சரிந்து விழுந்ததில் அனைத்து பொருட்களும் சேதமடைத்ததால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தங்குவதற்கு கூட இடமில்லாமல் தற்போது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Tiruvottiyur , Tiruvottiyur, building, accident
× RELATED முதல்வர் குடும்பம் குறித்து அவதூறு...