சென்னை: சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கையின் போது, சென்னை, திருநெல்வேலி, பழனி ஆகிய இடங்களில் மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் அனைத்து வசதிகளுடன் தொடங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் 3 புதிய கருணை இல்லங்கள் தொடங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறநிலையத்துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், சென்னை வில்லிவாக்கத்தில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் 19.1 கோடி மதிப்பீட்டிலும், திருநெல்வேலி அபிஷேக் நகரில் சுமார் 2.86 ஏக்கர் பரப்பளவில் ரூ.13.5 கோடி மதிப்பீட்டிலும், பழனியில் சுமார் 1.72 ஏக்கர் பரப்பளவில் ரூ.15.2 கோடி மதிப்பீட்டிலும் கருணை இல்லம் கட்டுவதற்கு பெருந்திட்டம் வரைபடம் மூலம் அவசர மையம், கோயில், நடைபாதை, தியான மண்டபம், தங்கும் அறை, குடிநீர், கழிப்பறை, தொலைக்காட்சி அறை, பார்வையாளர்கள் அறை, உடற்பயிற்சி சிகிச்சை, வாகனம் நிறுத்துமிடம், தோட்டம், உணவருந்தும் அறை, சமையறை, நூலகம், மின்தூக்கி, பசுமை வெளி உட்பட பல்வேறு வசதிகள் குறித்த விளக்கப்பட்டது. இதில் சில மாற்றங்கள் செய்து பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.