செஞ்சூரியன்: ‘தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5வதாக களம் இறங்கப்போவது ரகானேவா, ஷ்ரேயாசா என்பதை முடிவு செய்வது கடினமானது’ என்று இந்திய அணியின் துணைக் கேப்டன் ராகுல் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் நேற்று செய்தியாளர்களிடம், ‘ தென் ஆப்ரிக்காவில் நான் அதிகம் விளையாடியதில்லை. இங்கு களங்கள் எப்போதும் சவாலாக இருக்கும். பந்துகள் டென்னிஸ் பந்துகள் போல் எகிறும். முதல் 2 நாட்கள் சமாளிக்க முடியும். அதன்பிறகு பந்து வேகமாக வரும்.
அதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் பங்களிப்பு அதிகமாக இருக்கும். மொத்தத்தில் 5 பந்து வீச்சாளர்களுடன் களம் காண திட்டமிட்டுள்ளோம். எனவே பேட்ஸ்மேன்கள் எண்ணிக்கை குறையும். அதனால் 5வது இடத்தில் ரகானேவா, ஷ்ரேயாஸ் அய்யரா என்ற கேள்வி எழுகிறது. ரகானே முக்கியமான வீரர். கடினமான நேரங்களில் அவரது பங்களிப்பு அணியை கரை சேர்த்திருக்கிறது. அதேபோல்தான் புஜாராவும் அணிக்கு முக்கியமானவர். அதே நேரத்தில் கான்பூர் டெஸ்ட்டில் ஆடிய விதத்தால் ஷ்ரேயாஸ் தனக்கான இடத்தை உருவாக்கியுள்ளார். அதேபோல்தான் ஹனுமா விகாரியும் சிறப்பாக விளையாடி உள்ளார். எனவே யார், யாருக்கு அணியில் இடம் என்பது கடினமான முடிவு. ஆனால் விரைவில் அது குறித்து உங்களுக்கு தெரிந்து விடும்’ என்று தெரிவித்துள்ளார்.