டெல்லி: டெல்லியில் 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 148.33 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் தவணை 100 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை அடைய உறுதுணையாக இருந்த மருத்துவர், செவிலியர்கள், ஆசிரியர்களுக்கு நன்றி என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் அதனை அம்மாநில அரசு முனைப்புடன் கையாண்டு வருகிறது. இதனிடையே கொரோனா பாதிப்பை கண்டறிய நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. வீடு, வீடாக சென்று பரிசோதனை நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தினசரி 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டாலும்கூட அவர்களுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி அரசு தயார் நிலையில் உள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கொரோனா அறிகுறி லேசாக உள்ளவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அவர்களுக்கு தொற்று உறுதியானால் உடனே அரசுக்கு தெரிவிக்க வேண்டும். 2 மாதங்களுக்கு தேவையான மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் அரசிடம் தயாராக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.