லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஒரு கோடி மாணவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன், டேப்லெட் வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசு அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் கடந்த வெள்ளியன்று பொதுக்கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு செல்போனை பயன்படுத்த தெரியாது. லேப்டாப்பை எப்படி பயன்படுத்துவது என்றும் தெரியாது என்று கூறி விமர்சித்து இருந்தார். இந்நிலையில் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் ஒரு கோடி மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘முதல் கட்டமாக வருகிற 25ம் தேதி முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாளில் ஒரு லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும். லக்னோவில் நடக்கும் விழாவில் 60 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன், 40 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச டேப்லெட்களை முதல்வர் வழங்குகிறார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.