நிஜாம்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள புனித பொற்கோயிலுக்குள் நுழைந்து புனித நூல், வாள் இரண்டையும் எடுக்க முயன்றதாக உபியை சேர்ந்த ஒருவர் நேற்று அடித்து கொல்லப்பட்ட நிலையில், இன்று சீக்கிய கொடியை அவமதிக்க முயன்ற மற்றொரு நபரும் பக்தர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில், நிஜாம்பூர் கிராமத்தில், அடையாளம் தெரியாத 25 வயது நபர் ஒருவர் அங்குள்ள கோயிலுக்குள் நுழைந்து சீக்கியர்களின் கொடியான நிஷான் சாகிப்பை அகற்ற முயன்றுள்ளார். இந்நிலையில் அவரை பிடித்த பக்தர்கள் தனி அறை ஒன்றில் அடைத்து வைத்து உதைத்துள்ளனர். இந்த காட்சியை ஃபேஸ்புக்கிலும் லைவ் செய்துள்ளனர். இதையடுத்து அந்த இடத்திற்கு சென்ற போலீசார் பிடித்து வைக்கப்பட்ட நபரை விடுவிக்கும்படி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராரில், பக்தர்கள், அறையில் அடைத்து வைத்திருந்த நபரை அடித்து கொன்றுள்ளனர்.
ஏற்கனவே சீக்கியர்களில் புனித ஸ்தலமாக விளங்கும் பொற்கோயிலுக்குள் நுழைய முயன்றதாக, உபியை சேர்ந்த நபர் ஒருவர் நேற்று அடித்துக் கொல்லப்பட்ட நிலையில், இன்று மற்றொரு நபரும் அதேபோன்று கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.