சென்னை: , அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக இரண்டாம் கட்ட கட்சியின் அமைப்பு தேர்தல்கள் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல்களை நடத்துவதற்கு மட்டும், மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, பேரூராட்சி, நகரம் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதன்படி, இரண்டாம் கட்டத் தேர்தல்கள் சென்னை புறநகர், தென்சென்னை வடக்கு(கிழக்கு), தென்சென்னை வடக்கு (மேற்கு), தென்சென்னை தெற்கு(கிழக்கு), தென்சென்னை தெற்கு(மேற்கு), வடசென்னை வடக்கு (கிழக்கு), வடசென்னை வடக்கு (மேற்கு), வடசென்னை தெற்கு(கிழக்கு), வடசென்னை தெற்கு (மேற்கு) உள்பட கட்சி ரீதியான 40 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
அதிமுக அமைப்பு தேர்தல்களை நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல்(கட்சியின் உறுப்பினர்கள்) மினிட் புத்தகம், விண்ணப்ப படிவம், ரசீது புத்தகம், வெற்றி படிவம் முதலானவை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் அதை பெற்று ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்களிடம் வழங்கி, கட்சியின் சட்ட திட்ட விதிமுறைகளின்படி, இந்த அமைப்புத் தேர்தல்களை முறையாக நடத்திட வேண்டும். அவர்களுக்குதொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.