கோத்தகிரி: கோவையை சேர்ந்த பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கோவையை சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் சூலூர் பட்டணம் சாலையை சேர்ந்தவர் அஷித் (22). அதே பகுதியில் ஜிம்மில் பயிற்சியாளர். இவரது மனைவி கிருபா (21). அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர், அஷித்தின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம் டியூசன் படித்து வந்தார். அப்போது அந்த மாணவிக்கும், உடற்பயிற்சியாளர் அஷித்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது மாணவியின் குடும்பத்திற்கு தெரியவந்தது.
இதையடுத்து, மாணவியை அவரது தாய் கோத்தகிரியில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதையறிந்த அஷித், கோத்தகிரி சென்று மாணவியை அழைத்து சென்று கோவை சூலூரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்தார். இவரும் அங்கேயே தங்கினார். இதற்கு அஷித்தின் மனைவி கிருபாவும் உடந்தையாக இருந்தார். இதுதொடர்பாக, மாணவியின் உறவினர் மாணவி தாய்க்கு தகவல் தெரிவித்தனர். மாணவியை காணாததால் அவரது தாய் கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
இந்நிலையில், மாணவி மற்றும் அஷித் சூலூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அறிந்த போலீசார் விரைந்து சென்று அஷித், அவரது மனைவி கிருபா மற்றும் மாணவியை கோத்தகிரி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் ஊட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்மணி விசாரணை நடத்தினார். இதில் மாணவியை, அஷித் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அஷித், அவரது மனைவி கிருபா இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.