×

அமராவதி தலைநகரை அமைக்க தொடர்ந்து குரல் கொடுப்பேன்: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு பேச்சு

திருமலை: ‘ஐந்து கோடி மக்களின் நலனுக்காக, அமராவதி தலைநகர் விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன்,’ என்று முன்னாள் முதல்வர் சந்திரபாபு பேசினார். ஆந்திராவில் அமராவதி தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர், அமராவதியில் இருந்து திருப்பதி வரை நடத்திய பாத யாத்திரையின் நிறைவு மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், இம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:  ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகரமாக ஐதராபாத்தை உருவாக்கிய அனுபவம் எனக்குள்ள நிலையில், அமராவதியை தலைநகராக அறிவித்தேன்.

12 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒருபுறமும், 12 நாடாளுமன்ற தொகுதி மறுபுறமும் என மத்தியில் அமராவதி தேர்வு செய்யப்பட்டது. இங்கு கட்டிடங்கள் கட்டுவதற்கு நான் கேட்டதற்காக விவசாயிகள் நிலங்களை வழங்கினார்கள். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஜெகன் மோகன். ‘தலைநகருக்கு 30 ஏக்கர் இருந்தால் போதும். 35 ஆயிரம் ஏக்கர் நிலம் எதற்கு? என கூறினார். தற்போது மூன்று தலைநகர் வேண்டும் என கூறி வருகிறார். அமராவதி தலைநகருக்கு ஆந்திராவை பிரித்த காங்கிரஸ் உட்பட  அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கின்றன.

அமராவதி தலைநகருக்காக தொடர்ந்து  குரல் கொடுப்பேன். இவ்வாறு சந்திரபாபு பேசினார். இந்நிலையில், அமராவதி தலைநகர் கோரிக்கைக்கு போட்டியாக திருப்பதியில் இன்று ஆளும்  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் 3 தலைநகரங்களை வலியுறுத்தி மாநாடு நடத்தப்பட உள்ளது.

Tags : Amravati ,Chandrapabu ,AP , Amravati, former Chief Minister of Andhra Pradesh, Chandrababu
× RELATED ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு ரூ.529 கோடி...