கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்கின்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஜெயப்பிரியா என்ற நிதி நிறுவனம் 1985ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஜெயப்பிரியா நிதி நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் 51 கிளைகள் உள்ளது. 1985ஆம் ஆண்டு சிறிதளவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் படிப்படியாக வளர்ந்து தற்போது தமிழகம் முழுக்க 51 கிளைகளை கொண்டுள்ளது. கடலூர், பண்ருட்டி, விருத்தாச்சலம், நெய்வேலி, சிதம்பரம், திட்டக்குடி, வடலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த குழுமத்திற்கு திரையரங்குகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், உணவு பொருட்கள் தயாரிப்பு, திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தொழில்கள் உள்ளன. இதனால் இந்த நிறுவனங்களில் வரி ஏய்ப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறதா என்ற கோணத்தில் தற்போது சுமார் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது இந்த நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜெய்சங்கர் தேமுதிக கட்சியின் பிரமுகராக உள்ளார். தேமுதிக கட்சியின் சார்பாக 2014ஆம் ஆண்டு கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மேலும் இந்த ஜெயப்பிரியா நிறுவனத்தில் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு கடலூர் மாவட்டத்தில் 20 இடங்களில் தற்போது சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் சென்னையில் இருந்து வந்துள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.