திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சன்னதியில் ஆண்டுதோறும் கவுசிக ஏகாதசி தினத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், பூமாதேவி, தேவி மற்றும் ஆழ்வார்களுக்கு பட்டுப்புடவை சாத்தும் வைபவம் நடைபெறும். இதன்படி இந்தாண்டு நேற்று கவுசிக ஏகாதசி என்பதால் பெரிய பெருமாள் சன்னதியில் நேற்று இரவு 108 பட்டுப்புடவைகள் சாத்தும் வைபவம் நடைபெற்றது. இதற்காக ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் கருடாழ்வார் ஆகியோர் பெரிய பெருமாள் சன்னதிக்கு மேளதாளம் முழங்க கொண்டுவரப்பட்டனர்.
பெரிய பெருமாள் சன்னதியில் பெரிய பெருமாள், பூதேவி, தேவி, ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஆகியோர் ஒருசேர காட்சியளித்தனர். இதன்பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் 108 பட்டுப்புடவை சாத்தும் நிகழ்ச்சி துவங்கியது. 12 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சி இன்று அதிகாலை வரை நீடித்தது. இவற்றை காண ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலும் குவிந்தனர்.