இஸ்ரேல்: பிரபஞ்ச அழகி பட்டத்தை இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா 21 ஆண்டுகளுக்கு பின் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளது. இஸ்ரேலின் ஏலேட் நகரில் 70வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 80 பேர் கலந்துக்கொண்டனர். இதில் பராகுவே மற்றும் தென்னாப்பிரிக்க அழகிகளை வீழ்த்தி பிரபஞ்ச அழகியாக பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் கவுர் சாந்து வெற்றிபெற்று வாகை சூடினார். அவருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகியான மெக்சிகோவின் ஆண்டிரியா மீஸா கிரீடம் அணிவித்தார்.
பட்டத்தை வென்ற மகிழ்ச்சியுடன் மேடையில் பேசிய ஹர்னாஸ், இடம்பெண்களே! உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள் என அறிவுரை வழங்கினார். வெளியே வாருங்கள், பேசுங்கள்; ஏனெனில் உங்கள் வாழ்வில் நீங்களே ஹீரோ என கூறிய அவர், தன்னை தான் நம்பியதாலேயே இந்த வெற்றி சாத்தியமானதாக நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். பிரபஞ்ச அழகி போட்டியின் இறுதி சுற்றில் காலநிலை மாற்றம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஹர்னாஸ், இயற்கை பல பிரச்சனைகளை எதிர்கொள்ள மக்களின் பொறுப்பற்ற நடத்தை தான் காரணம் என்றார். பேசுவதை குறைத்துவிட்டு நடவடிக்கையில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் என்ற ஹர்னாஸ்சின் பதிலே அவருக்கு வெற்றியை ஈட்டி தந்தது.
2017ம் ஆண்டு முதல் தனது அழகுப்போட்டி பயணத்தை தொடங்கிய ஹர்னாஸ், பெமினா மிஸ் இந்தியா பஞ்சாப் உள்ளிட்ட பட்டங்களை வசமாக்கியுள்ளார். பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் இவர், ஏராளமான பஞ்சாப் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேடையில் ஹர்னாஸ் பேசியதாவது; இன்றைய இளம்பெண்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அழுத்தம், தங்களை நம்புவது! நீங்கள் தனித்துவம் வாழ்ந்தவர்கள் என்பதை நீங்கள் நம்புவது உங்களை அழகாக மாற்றுகிறது. உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள், உலகளவில் நடக்கும் முக்கியமான விஷயங்களை பற்றி பேசுவோம். வெளியே வாருங்கள், உங்களுக்காக பேசுங்கள், ஏனென்றால் நீங்களே உங்கள் வாழ்வின் கதாநாயகிகள் என்றார்.