×

வண்ணாரப்பேட்டை பகுதியில் 1200 போதை ஊசி, மாத்திரை பறிமுதல்: 9 பேர் கைது

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரை, போதை ஊசி விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் உத்தரவின்பேரில், வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பிராவின் டேனி தலைமையில் தனிப்படை போலீசார், வண்ணாரப்பேட்டை பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, கிழக்கு கல்லறை சாலை சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படி திரிந்த 6 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஜெகநாதன் (21), கொருக்குப்பேட்டை ஒண்டிவீரன் கோயில் தெருவை சேர்ந்த சாய் சதீஷ் (25), கணேஷ் பாபு (21), கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரம் குடியிருப்பை சேர்ந்த ஐயப்பன் (19), கொருக்குப்பேட்டை மன்னப்பன் தெருவை சேர்ந்த கவுதம் (20), நைனியப்பன் தெருவை சேர்ந்த பாலாஜி (25) என்பதும், இவர்கள் போதை மாத்திரை, போதை ஊசி பயன்படுத்தியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ மற்றும் 400 போதை மாத்திரை, போதை ஊசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் கொடுத்த தகவல்படி ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த ஹர்ஷா (31), விஜய் (26), வேலூரை சேர்ந்த பிரபு (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவரிடமிருந்து 800 போதை மாத்திரை, போதை ஊசி, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து போதை மாத்திரை, ஊசிகளை கடத்தி வந்து வடசென்னை பகுதிகளில் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கும் போதை ஊசி, போதை மருந்து கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

* 7 கிலோ கஞ்சா பறிமுதல்
மடிப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் கஞ்சா விற்ற  ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கங்கேஸ்வர சேத்தி (30) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சா, ஊது குழல்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

Tags : Washermenpet , 1200 drug injection and pill confiscated in Washermenpet area: 9 arrested
× RELATED வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில்...