×

செஞ்சி அருகே பரபரப்பு காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்தி மொட்டை அடித்த பெற்றோர்: உறவினர் கைது; தந்தை உள்பட 4 பேருக்கு வலை

மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்தூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (29). பூக்கடையில் வேலை செய்கிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக திண்டிவனம் அடுத்த  அய்யந்தோப்பு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண், சென்னை தனியார் துணிக்கடையில் வேலை செய்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும் பெண்ணின் பெற்றோர் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 9ம் தேதி வீட்டை விட்டு இருவரும் வெளியேறி, செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோயிலில் திருமணம் செய்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த பெண்ணின் பெற்றோர், பெண்ணை தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர். தன் மனைவியை அவரது பெற்றோர் கடத்தி சென்று விட்டதாக செஞ்சி காவல்நிலையத்தில் யுவராஜ் புகார் அளித்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுக்காததால், விழுப்புரம் எஸ்பி ஸ்ரீ நாதாவிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்படி செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து, பெண்ணை தேடி வந்தனர். இதற்கிடையே புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு பகுதியில் உறவினர் வீட்டில் மொட்டையடிக்கப்பட்ட   நிலையில் பெண்ணை போலீசார் மீட்டனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிங்கவரம் கோயிலில் இருந்து தன்னை அழைத்து சென்று தென்பாலை கிராமத்தில் உள்ள உறவினர் அண்ணாமலை என்பவர் வீட்டில் தங்க வைத்தனர். முன்னதாக அங்கு ஏரிக்கரையில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் வைத்து குடும்ப மானத்தை கெடுத்துவிட்டாய், என கூறி தனது தந்தை தனக்கு மொட்டை அடித்துவிட்டதாக போலீசிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உறவினர் அண்ணாமலையை கைது செய்த போலீசார், பெண்ணின் தந்தை உள்பட 4 பேரை தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்த மகளுக்கு பெற்றோர் மொட்டை அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Ginger , Parents who kidnapped and shaved the wife of a sensational romantic married woman near Ginger: relative arrested; Web for 4 people including father
× RELATED இஞ்சியின் மருத்துவப் பயன்கள்!