சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தல் சுமுகமாக நடைபெற மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவில், முதல்கட்டமாக வருகிற 13 மற்றும் 14ம் தேதி நடைபெறும் கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு நிர்வாகிகள், நகர வார்டு நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்ட நிர்வாகிகள் தேர்தல்களை நடத்துவதற்கான மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், ஒன்றிய, பேரூராட்சி, நகரம் மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் தெற்கு, செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், அமைப்பு தேர்தல்களை நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல்), மினிட் புத்தகம், விண்ணப்ப படிவம், ரசீது புத்தகம், வெற்றி படிவம் முதலானவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்களிடம் இருந்து பெற்று, அவற்றை ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்களிடம் வழங்கி, அதிமுக சட்ட திட்ட விதிமுறைகளின்படி அதிமுக அமைப்பு தேர்தல்களை முறையாக நடத்தி வேண்டும். அதிமுக அமைப்பு தேர்தல்கள் சுமுகமாக நடைபெறும் வகையில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.