பாணாவரம் : பாணாவரம் அருகே தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாணாவரம் அருகே மேல்வீராணம், பொன்னப்பன்தாங்கள் கிராமங்களுக்கு இடையே, வாலாஜா செல்லும் தார் சாலை உள்ளது. இச்சாலை, காவேரிப்பாக்கம், சோளிங்கர், பனப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு இணைப்புச் சாலையாக உள்ளது.
இந்நிலையில். தார்சாலை அமைந்துள்ள பகுதியில், இரும்பு தொழிற்சாலை, கிரானைட் கற்கள் தொழிற்சாலை உள்ளதால், கனரக வாகனங்கள் அதிகளவு செல்வதால் கடுமையாக சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவசரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, சாலையை சீரமைத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.