டெல்லி: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் உடலுக்கு தலைவர்கள் பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் பலியாகினர். இந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக விபத்தில் சிக்கியது. இதை தொடர்ந்து, குன்னூரில் இருந்து பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள், தலைநகர் டெல்லி பாலம் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டது.
நேற்று இரவே பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். ராணுவ மருத்துவமனையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் கொண்டுவரப்பட்டு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி நேரடியாக சென்று மலர்வளையம் வைத்து பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் வேணுகோபாலும் உடனிருந்தார்.
இதேபோல் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஏராளமான எம்.பி.க்கள் வருகை புரிந்து தங்களுடைய அஞ்சலியை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அதன்படி, திமுக சார்பில், கனிமொழி, ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, செந்தில், தனுஷ், கெளதம் சிகாமணி, ஞான திரவியம், சண்முக சுந்தரம், செல்வம், அந்தியூர் செல்வராஜ், ராஜேஷ்குமார் உள்ளிட்ட எம்.பி.க்கள் நேரடியாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். நடிகை குஷ்பூவும் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்கள், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.