ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட அருணா தியேட்டர் எதிரே ரயில்வே சப்வே உள்ளது. இதன் வழியாக காந்தி நகர், விஸ்வநாதன் நகர், திடீர் நகர் பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒட்டன்சத்திரம் பகுதியில் பெய்த கனமழையால் சப்வேயில் மழைநீர் தேங்கி சுமார் 20 அடிக்கு மேல் குளம் போல் காட்சியாளிக்கின்றது. மழைகாலங்களில் இங்கு தண்ணீர் தேங்குவதால் சுமார் ஒரு கிமீ சுற்றி மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மழைநீர் பல நாட்களாக குளம்போல் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படும் இடமாக மாறியுள்ளது. முன்பெல்லாம் அவ்வப்போது தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் அகற்றி வந்தனர். ஆனால் தற்போது மழைநீர் நீச்சல் குளம்போல் தேங்கியுள்ளதால் அகற்றாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் பொதுமக்கள் கடும்அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக ரயில்வே சப்வேயில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதுடன், இங்கு மழைநீர் மீண்டும் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.