மணப்பாறை : மணப்பாறை அருகே பல ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பிய சமுத்திரம் பெரியகுளம் மற்றும் பின்னத்தூர் குளத்திலிருந்து உபரி நீர் மறுகால் பாய்ந்து வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.மணப்பாறையை அடுத்த சமுத்திரத்தில் சுமார் 480 ஏக்கர் பரப்பளவில் சமுத்திரம் பெரிய குளம் உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்குளத்தின் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வடகிழக்கு பருவமழையின் காரணமாக தொடர்ந்து பெய்துவரும் மழையினால் இந்த குளம் சுமார் 16 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது முழுவதுமாக நிரம்பி உபரி நீர் மறுகால் பாய்ந்து வெளியேறி வருகின்றது.
இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் குளத்திற்கு சென்று தண்ணீர் கலிங்கி வழியாக வெளியேறுவதை மகிழ்ச்சியுடன் பார்த்து சென்றனர்.
இதேபோல மணப்பாறையை அடுத்த பின்னத்தூரில் சுமார் 130 ஏக்கர் பரப்பளவில் பின்னத்தூர் பெரிய குளம் உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது தான் நிரம்பி உள்ளது. இதனையடுத்து, குளத்திலிருந்து வெளியேறும் நீரில் இளைஞர்கள் நின்று செல்பி எடுத்தும், குளித்தும் மகிழ்ந்தனர்.