×

பாலியல் தொல்லையால் கோவை மாணவி தற்கொலை!: ஆசிரியரை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!!

கோவை: கோவையில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஆசிரியர் மிதுனை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோவையில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த வாரம் பாலியல் துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்காத தனியார் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து, கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் மீரா ஜாக்சன் நேரில் ஆஜராகி  கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனிடையே கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அச்சமயம் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Tags : Coe , Sex, Coimbatore Student, Teacher, Court
× RELATED மேட்டுப்பாளையம் பவானியாற்றில் செந்நிறமாக ஓடும் தண்ணீர்