சித்தூர் : சித்தூர் காந்தி சிலை அருகே அரசு பள்ளி சுவர்களில் செடி, கொடிகள் முளைத்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சித்தூர் காந்தி சிலை அருகே மிகவும் பழமை வாய்ந்த பிசிஆர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த 1954ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்டப்பட்டது. இந்த பள்ளியில் தெலுங்கு, தமிழ் வழி பாட வகுப்புகள் நடைபெறுகிறது.
1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளது. இந்த பள்ளி சுவர்களில் செடி,கொடிகள் முளைத்து சூழ்ந்துள்ளது. இதனால், விரிசல் ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நாள்தோறும் பள்ளி கட்டடத்தை பார்த்துச் செல்கின்றனர்.
ஆனால், அதில் வளரும் செடி, கொடிகளை அகற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், மாணவ மாணவிகளுக்கு ஆபத்து ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இனியாவது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மிகவும் பழமைவாய்ந்த கட்டிடத்தில் வளர்ந்துள்ள செடி, செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.