உடுமலை : உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் கரைகளில் வளர்ந்துள்ள செடி,கொடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுப்பணித் துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அணைகளின் கரைகளை பலப்படுத்தும் நோக்கத்துடன் அவற்றில் வளர்ந்திருந்த செடிகொடி புதர்களை அகற்றும் பணி துவங்கியது. திருமூர்த்தி நகர் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முதல் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரும் காண்டூர் கால்வாய் வரை சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு அணையின் கரைகளில் வளர்ந்திருந்த கருவேல முட்கள் புதர்கள் செடிகள் கொடிகள் அனைத்தும் வெட்டி அகற்றும் பணியில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்த பருவமழை காரணமாக அணையின் கரைகளில் வளர்ந்திருந்த செடி கொடிகளை ஆரம்பக்கட்டத்திலேயே அகற்றிவிட்டால் அவற்றின் வேர்கள் அணைகளில் விரிசல் ஏற்படக்கூடிய அபாயத்தை தவிர்க்கும் பொருட்டு கரைகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.