தர்மபுரி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பிலிகுண்டுலு பகுதி காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 70,000 கனஅடியாக உள்ளது. கர்நாடகாவிலுள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது.
அந்த வகையில் நேற்று காலை வினாடிக்கு 50,000 கன அடி நீர்வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 70,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கலில் உள்ள அருவிகளில் பாறைகளை மூடியபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.