சத்தியமங்கலம் : பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து வருவதால் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளதால் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரம், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த 17 ம் தேதி அணையின் நீர்மட்டம் 104 அடியை எட்டியது.
அணை முழு கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் ஒரு அடி மட்டுமே உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றில் உபரி நீராக திறக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,124 அடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து பவானி ஆற்றில் 11,600 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை 1,826 கன அடியாக சரிந்தது.
அணைக்கு நீர்வரத்து சரிந்ததால் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் திறப்பு நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டது. பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் 1800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 103.84 அடியாகவும் நீர் இருப்பு 31.8 டிஎம்சியாகவும் உள்ளது.