×

மழையால் சேதமடைந்த நெல் பயிருக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்தி தர வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி பாசன மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் குழுவும் சுமார் 68,000 ஹெக்டேர் பரப்பளவில், அதாவது 1.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்து இருப்பதாக தமிழக முதல்வரிடம் அறிக்கை அளித்திருக்கிறது.
 அதன் அடிப்படையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ₹8,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது போதுமானதல்ல.  அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து மழைநீரில் மூழ்கி சேதமுற்ற பயிர்களுக்கு மட்டும் தான் ஏக்கருக்கு ₹8000 இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பா பயிர்களைப் பொறுத்தவரை மழையில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படாது என்றும், மறு நடவு செய்ய வசதியாக ஹெக்டேருக்கு ₹6,038, அதாவது ஏக்கருக்கு ₹2415 மதிப்புள்ள விதைகள், நுண்ணூட்டச் சத்து, உரங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 மழையில் மூழ்கி சேதமடைந்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்காது என்பது ஒரு புறமிருக்க, குறுவை பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு போதுமானது
அல்ல. குறுவை நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படவில்லை என்பதாலும், சம்பா பயிர் இளம்பருவத்தில் இருப்பதாலும் உழவர்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை.  இதை கருத்தில் கொண்டு தொடர் மழையால் சேதமடைந்த நெல்லுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட உழவர்களின் துயரைத் துடைக்கும் வகையில், சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ₹30,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதேபோல், வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு குறைந்தபட்சம் ₹5,000 வீதம் நிதியுதவி அளிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Ramadas , Rainfall, for paddy crop, compensation, Ramadas
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெண்...