×

நாட்டை புதிய உச்சத்துக்கு எடுத்து செல்லும் ஒரே மந்திரம் கடமை... கடமை... கடமை... சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் பேச்சு

புதுடெல்லி: ‘நாட்டை புதிய உச்சத்துக்கு எடுத்து செல்வதற்கான ஒரே மந்திரம், கடமைதான்,’ என்று சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார். சட்டப்பேரவை சபாநாயகர்களின் 82வது மாநாடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நேற்று சிம்லாவில் தொடங்கியது. இதில், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உட்பட 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சபாநாயகர்கள் கலந்து கொண்டனர். இதில், பிரதமர் மோடி காணொலி மூலமாக தொடக்க உரை ஆற்றினார்.

அதில் அவர் பேசியதாவது: இந்திய ஜனநாயகம் என்பது வெறும் நடைமுறை அல்ல. வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். நமது இயல்பிலேயே அது ஊறியுள்ளது.  எதிர்வரும் ஆண்டுகளில் அசாதாரணமான இலக்குகளை அடையும் வகையில், நாட்டை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதை அனைவரின் முயற்சியின் மூலமாக மட்டுமே நிறைவேற்ற முடியும். எனக்கு தெரிந்து அதற்குள்ள ஒரே மந்திரம், ‘கடமை... கடமை... கடமை...’ வடகிழக்கு மாநிலங்களின் மிக நீண்ட கால பிரச்னைகளுக்கான தீர்வாக இருந்தாலும் சரி, அல்லது பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த பெரிய மேம்பாட்டுத் திட்டங்களை முடிப்பதற்கான தீர்வாக இருந்தாலும் சரி, கடந்த ஆண்டுகளில் இவற்றை ஒற்றுமையின் மூலம் மட்டுமே சாதித்துள்ளோம். அதற்கு சிறந்த உதாரணமாக, கொரோனா பெருந்தொற்றை ஒற்றுமையாக இருந்து வென்றதை கூறலாம்.

ஒவ்வொரு சபாநாயகரும் ஆண்டுக்கு 3 அல்லது 4 நாட்களை ஒதுக்கி, சமுதாயத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்க முன்வர வேண்டும். இதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்களுக்கு தனி நேரம் ஒதுக்க வேண்டும். நாட்டில் உள்ள சட்டப்பேரவைகளை ஒருங்கிணைக்கவும், தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்கவும் ‘ஒரே நாடு; ஒரே சட்டமன்ற தளம்,’ என்ற இணையதளம் தொடங்கலாம். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சட்டப்பேரவை கூட்டங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, சட்டங்கள் இயற்றப்படும்போது விவாதங்கள் நடைபெறாமல் இருப்பது கவலை அளிக்கிறது. நாம் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது அனைத்து சட்டப்பேரவைகளின் விதிகளும், நடைமுறைகளும் ஒரே சீராக இருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப சட்டப்பேரவைகளின் செயல்பாடுகள் அமைய, மாதிரி ஆவணத்தை தயாரிக்க வேண்டும்,” என்றார்.

Tags : Speakers Conference , The only magic that will take the country to new heights is duty ... duty ... duty ... Prime Minister's speech at the Speakers Conference
× RELATED இன்று ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாடு: கனடா சபாநாயகர் புறக்கணிப்பு