ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மூட்டை தூக்கும் தொழிலாளி. கடந்த 2011ல் பணியில் இருந்தபோதே இறந்துவிட்டார். சம்பந்தப்பட்ட துறையில் இருந்து குடும்ப நிதி பெற, அவரது மனைவி ராஜேஸ்வரி, 3 மகன்கள் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இது தொடர்பான விசாரணை 2013ல் நடந்தது. அப்போது, ஈரோடு கிழக்கு வருவாய் கிராம வருவாய் ஆய்வாளராக (ஆர்ஐ) இருந்த மனோகரன் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1,000 லஞ்சம் கேட்டுள்ளார். ராஜேஸ்வரி புகாரின்படி ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் 28-11-2013ல் மனோகரனை கைது செய்தனர். இந்த வழக்கில் மனோகரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஈரோடு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.