×

பென்னாகரம் அருகே பரபரப்பு ஆள்கடத்தல் வழக்கில் அதிமுக நிர்வாகி கைது

பென்னாகரம்: தர்மபுரி மாவட்ட ஆவின் கூட்டுறவு சங்க தலைவராக, பென்னாகரம் அடுத்த தாளப்பள்ளத்தை சேர்ந்த டி.ஆர்.அன்பழகன்(58) உள்ளார். இவர், அதிமுக விவசாய அணியின் மாவட்ட தலைவராகவும் உள்ளார். இவருக்கு சொந்தமாக கல்குவாரி உள்ளது. மேலும், சாலை ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறார். இவரது கிரஷரில் பென்னாகரம் அடுத்த தாசம்பட்டி, ஜெல்மாரம்பட்டியை சேர்ந்த முத்துவேல் (36), சுரேஷ் (32) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இருவரும் தனது கிரஷரில் டீசல் திருடுவதாக குற்றம்சாட்டிய டி.ஆர்.அன்பழகன், நேற்று ஆதரவாளர்கள் சிலருடன் ஜெல்மாரம்பட்டிக்கு சென்றார். அங்கு முத்துவேல், சுரேஷ் ஆகியோரை, டீசல் திருடுகிறீர்களா என கேட்டு மிரட்டியதோடு, இருவரையும் உருட்டுக்கட்டை மற்றும் பைப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர், தான் வந்த காரில் அவர்களை தூக்கி சென்று விட்டார்.

தனது கண் முன்னே மகனை கடத்தி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்த முத்துவேலின் தந்தை பெரியசாமி, இதுகுறித்து பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், முத்துவேல், சுரேஷ் ஆகியோரை டி.ஆர்.அன்பழகன் தாக்கி கடத்தி சென்று தெரியவந்தது. இதையடுத்து, டி.ஆர்.அன்பழகன், அவரது ஆதரவாளர்களான தாளப்பள்ளம் முருகன்(36), கொட்லுமாரம்பட்டியை சேர்ந்த மகேந்திரன்(32) ஆகிய 3பேர் மீதும், ஆள் கடத்தல், கொலை மிரட்டல், பயங்கர ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தியது உள்பட 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், 3 பேரையும் நேற்று மாலை கைது செய்தனர். நெஞ்சு வலிப்பதாக டி.ஆர்.அன்பழகன் கூறியதால், தர்மபுரி அரசு மருத்துவமனையில்அவரை போலீசார் அனுமதித்தனர்.


Tags : AIADMK ,Pennagaram , AIADMK executive arrested in Pennagaram kidnapping case
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...