×

காந்தியா? நேதாஜியா? கங்கனா மீண்டும் சர்ச்சை கருத்து

மும்பை: காந்தியுடன் நேதாஜியை ஒப்பிட்டு நடிகை கங்கனா ரணாவத் மீண்டும் சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார். 1947ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. பிச்சைதான் கிடைத்தது என்றும், 2014ம் ஆண்டு நரேந்திர மோடி ஆட்சி ஆமைத்த பின்னர்தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்றும் நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் , சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் மட்டுமல்ல பாரதிய ஜனதா எம்.பி. வரும் காந்தி, அக்கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டில் ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர்.

என் தந்தையையும் சுதந்திர போராட்ட வீரர்களையும் இழிவு படுத்தியதற்காக கங்கனா மராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தி பத்திரிகைகள் வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி ஆம் ஆத்மி கட்சியின் மும்பை நகர இணைச் செயலாளரும் சுதந்திர போராட்ட வீரர் கல்மந்தர்காரின் மகனுமான காஷிநாத் கல்மந்தர்கா கங்கனாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தவறினால் கங்கனாவுக்கு எதிராக கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதன் இடையே 1947ம் ஆண்டு இந்தியாவுக்கு கிடைத்தது பிச்சைதான் சுதந்திரம் இல்லை என்று கங்கனா ரணாவத் மீண்டும் கூறியுள்ளார். இது தொடர்பாக 1940ல் நாளிதழ்களில் வெளியான பழைய கட்டுரைகளை மேற்கோள் காட்டி பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோசை ஒப்படைக்க மகாத்மா காந்தியும் மற்றவர்களும் சம்மதித்துவிட்டதாக 1940ம் ஆண்டு வெளியான பத்திரிகை ஒன்று தலைப்பு செய்தி வெளியிட்டிருந்தது. சுதந்திரத்துக்காக போராடியவர்களை இவர்கள் தங்கள் எஜமானரிடம் ஒப்படைத்தனர். அவர்களுக்கு நெஞ்சுரம் கிடையாது. நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறது என்று ரத்தம் கொதிக்கவில்லை. ஆனால் இவர்கள் பதவி ஆசை பிடித்த தந்திரசாலிகள்.

காந்தி என்றுமே, பகத் சிங்கையோ நேதாஜி சுபாஷ் சந்திர போசையோ ஆதரிக்கவே இல்லை. இவர்கள்தான் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று எங்களுக்கு சொல்லித் தந்தார்கள். இப்படித்தான் சுதந்திரம் கிடைக்கும் என்றார்கள். அப்படி செய்தால் சுதந்திரம் கிடைக்காது பிச்சைதான் கிடைக்கும். ஜான்சி ராணி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வீர் சாவர்கர் ஆகியோரின் தியாங்களை பார்த்திருக்கிறோம். 1857ம் ஆண்டு போரிட்ட ஜான்சி ராணி பற்றி எல்லோருக்கும் தெரியும். 1947ம் ஆண்டு எந்த போர் நடந்தது?. இது பற்றி தெளிவாக விளக்கி கூறினால் நான் மன்னிப்பு கேட்க தயார். பத்மஸ்ரீ விருதையும் திருப்பி கொடுக்கத் தயார். 2014ம் ஆண்டுக்கு பின்னர் தூங்கிக் கிடந்த நாகரீகம் விழித்தெழுந்துள்ளது. உரத்த குரலில் கர்ஜனை செய்கிறது. ஆங்கிலம் தெரியாதவர்களையும் சிறிய நகரங்களில் இருந்து வந்தவர்களையும் இப்போது யாரும் இழிவாக பேசுவதில்லை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். இதுதான் உண்மையான சுதந்திரம். இவ்வாறு கங்கனா தெரிவித்தார்.

Tags : Gandhi ,Netaji ,Kangana , Gandhi? Netaji? Kangana again commented on the controversy
× RELATED ராஜீவ் காந்தி குறித்த விமர்சன...