டேராடூன்: முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் எழுதிய புத்தகம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய சல்மான் குர்ஷித், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. சல்மான் குர்ஷித்தின் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாடில் உள்ள சல்மான் குர்ஷித்தின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. வீடு தீ பற்றி எரியும் படத்தை சல்மான் குர்ஷித் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ராகேஷ் கபில் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சல்மான் குர்ஷித் வீடு மீதான தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.