×

மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தில் நிவாரணம் வழங்கிய 7 வயது சிறுமி: புளியந்தோப்பில் நெகிழ்ச்சி

சென்னை: சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7 வயது சிறுமி நிவாரண உதவிகளை வழங்கிய சம்பவம், புளியந்தோப்பு பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  தொடர் மழை காரணமாக கடந்த 5 நாட்களாக சென்னை முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்தது. கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்த நிலையில், தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களை வழங்கலாம், என மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த 7 வயது சிறுமி, சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புளியந்தோப்பு குட்டி தம்புரான்  தெருவை சேர்ந்தவர் காந்தி நாகராஜன் - சிவரஞ்சனி தம்பதியின் மகள் ஜனனி (7). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறாள். இச்சிறுமி,  சைக்கிள் வாங்குவதற்காக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடுத்த பணத்தை சிறுக சிறுக என ₹5 ஆயிரம் சேமித்து வந்தாள். இந்நிலையில், தனது குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களின்றி பொதுமக்கள் அவதிப்படுவதை கண்ட சிறுமி, தான் சேமித்து வைத்திருந்த பணத்தின் மூலம் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுமி தான் சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த ₹5 ஆயிரத்தில் பால் பாக்கெட்கள், ரொட்டி உள்ளிட்டவற்றை வாங்கி தனது பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று வழங்க முடிவு செய்தார்.

இதுபற்றி அறிந்த போலீசார், அந்த சிறுமிக்கு படகு வசதி செய்து கொடுத்தனர். இதையடுத்து, பால் பாக்கெட்கள், ரொட்டி ஆகியவற்றை படகில் வைத்து, சிறுமி அந்த பகுதி மக்களுக்கு நேரில் எடுத்துச் சென்று வழங்கினார். இந்த சிறிய வயதில் சிறுமியின் பொதுநல ஆர்வத்தை கண்டு அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags : Puliyanthope , Flood relief for people, 7-year-old girl
× RELATED புளியந்தோப்பில் அதிகாலை பரபரப்பு...