சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று தரமணி, தந்தை பெரியார் நகர், சாஸ்திரி நகர், வேளச்சேரி அம்பேத்கர் நகர், மேற்கு மாம்பலம் காந்தி தெரு, வடிவேல்புரம் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மநீம சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கினார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பருவமழை என்பது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான நிகழ்வு. பருவமழையை பேரிடராக மாற்றுவது நமது கவனக்குறைவே. இதுபோன்ற விஷயங்களில் அரசுக்கும், தனி மனிதர்களுக்கும் அதிக பொறுப்பு இருக்கிறது. இந்த பாதிப்பில் ஒவ்வொருவரும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை குற்றமாக கருதி, நாமும் அதை செய்யாமல் இருக்க வேண்டும். பேரிடர் காலத்தில் நாங்கள் உள்பட அனைவரும் வந்து உதவி செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.