×

தர்மபுரியில் இன்று அதிகாலை பயங்கரம்.! தண்டவாளத்தில் பாறைகள் சரிந்ததால் ரயில் தடம் புரண்டு விபத்து: டிரைவரின் சாமர்த்தியத்தால் 2300 பயணிகள் தப்பினர்

தர்மபுரி: தர்மபுரி அருகே இன்று அதிகாலை ரயில் பாதையில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததால், அவ்வழியே சென்ற கண்ணூர்-பெங்களூரு சிறப்பு ரயில் தடம் புரண்டது. 7 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி நின்றபடி, பெரும் விபத்தில் இருந்து தப்பியது. பாறைகள் உருண்டு வந்து ரயில் மீது விழவும் லோகோ பைலட் சாதுர்யமாக ரயிலை நிறுத்தியதால், பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். சம்பவ இடத்தில் பெங்களூரு, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து கர்நாடகா மாநிலம் யஷ்வந்த்பூருக்கு தினசரி சிறப்பு விரைவு ரயில் (07390) இயக்கப்பட்டு வருகிறது. கண்ணூரில் நேற்றிரவு புறப்பட்ட இந்த ரயில், இன்று அதிகாலை 3 மணியளவில் சேலம் வந்தது. பின்னர், தர்மபுரி நோக்கி புறப்பட்டுச் சென்றது. அதிகாலை 3.50 மணிக்கு தொப்பூர்-சிவாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட பகுதியில் முத்தம்பட்டி வனப்பகுதி வழியாக வந்தது. அப்போது, மழையின் காரணமாக திடீரென ரயில் பாதையை ஒட்டிய மேட்டு பகுதியில் மண் சரிந்து, அங்கிருந்த பாறைகள் உருண்டு வந்தன. அந்த பாறைகள் அடுத்தடுத்து ஓடிக்கொண்டிருந்த ரயில் மீது விழுந்தது.

பயங்கர சத்தத்துடன் ரயிலின் மீது பாறைகள் விழுந்ததில், பெட்டிகள் தடம் புரண்டன. இதனால், லோகோ பைலட் சாதுர்யமாக செயல்பட்டு, ரயிலை உடனடியாக நிறுத்தினார். ரயிலுக்குள் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு, கீழே இறங்கினர். அதிகாலை வேளை என்பதாலும், காட்டுப்பகுதி என்பதாலும் கடும் கும்மிருட்டு இருந்தது. இதனால், எந்த இடத்தில் இறங்கியிருக்கிறோம் எனத்தெரியாமல் பயணிகள் தவித்தனர். மறுபக்கம் வந்து பார்த்தபோது, ரயிலின் மீது அடுக்கடுக்காக பாறாங்கற்கள் வந்து விழுந்து கிடந்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். எப்படியோ உயிர் தப்பிவிட்டோம் என பெருமூச்சு விட்டனர். இந்த விபத்தில், 3 அடுக்கு ஏசி பெட்டிகளாக பி1, பி2, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளான எஸ்-6, எஸ்-7, எஸ்-8, எஸ்-9, எஸ்-10 ஆகிய 7 பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கி தடம் புரண்டு நின்றது. இன்னும் சற்று வேகமாக ரயில் சென்றிருந்தால், அந்த பெட்டிகள் தலைகுப்புற கவிழ்ந்து பெரும் உயிர்சேதத்துடன் கூடிய விபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால், லோகோ பைலட் உடனே ரயிலை நிறுத்திய காரணத்தால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இவ்விபத்து பற்றி பெங்களூரு ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து கோட்ட மேலாளர் ஷியாம்சிங் தலைமையில் அதிகாரிகள் குழு சம்பவ இடம் விரைந்தனர். மேலும், அருகேயுள்ள கோட்டம் என்பதால், சேலம் கோட்ட மேலாளர் கௌதம் நிவாஸ் தலைமையில் ரயில்வே அதிகாரிகளும், பொறியியல் பிரிவு ஊழியர்களும் சம்பவ இடம் சென்றனர். ஈரோட்டில் இருந்து விபத்து மீட்பு ரயில் (ஏஆர்டி) வரவழைக்கப்பட்டது. அதேவேளையில் பெங்களூரில் இருந்தும் மீட்பு ரயில் வந்தது. மருத்துவக்குழுவும் சம்பவ இடம் வந்து, யாருக்கேனும் காயம் ஏற்பட்டுள்ளதா? எனக்கேட்டு முதலுதவி சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்தனர். மீட்குக்குழுவினர், முதலில் ரயிலில் இருந்த 2,348 பயணிகளும் பத்திரமாக மீட்டனர். பின்னர், அவர்களை சேலம் ரயில்ேவ ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து வேறு பாதையில் மற்றொரு சிறப்பு ரயிலில் பெங்களூருக்கு அனுப்பி வைக்க ரயில்வே அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

இதற்காக சம்பவ இடத்திற்கு 5 பஸ்களும், தொப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு 15 பஸ்களும் சென்றன. அந்த பஸ்களில் பயணிகள் ஏறி, சேலம் வந்தனர். இதனிடையே இன்று காலை 7 மணிக்கு, விபத்தில் சிக்கிய ரயிலின் முதல் 3 பெட்டிகள் சேதமின்றி மீட்கப்பட்டது. அந்த ரயிலில் இருந்த பயணிகளை ஏற்றிக் கொண்டு தர்மபுரிக்கு ரயில் சென்றது. அங்கிருந்து யஸ்வந்த்பூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. மற்ற பெட்டிகளை மீட்கும் பணியில் பெங்களூரு, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று மதியத்திற்குள் விபத்தில் சிக்கிய ரயிலை மீட்டு, அனுப்பி விடுவோம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து பற்றி பெங்களூரு ஆர்பிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள், சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சேலம் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி குணசேகரன் தலைமையிலான போலீசாரும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Grotto , Terror this morning in Dharmapuri! 2300 passengers escape due to driver's skill
× RELATED வரும் 30-ம் தேதி தர்மபுரி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்