×

பாதுகாப்பு முகாம்களில் இருப்பவர்களுக்கு நிவாரணம்: கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்

கும்முடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் நிவாரண உதவிகளை வழங்கினார். கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் கடந்த 30 மணி நேரத்தில் 223 மில்லி மீட்டர் மழை பெய்த நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன், வட்டாட்சியர் மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து புயல், மழை வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் பல்வேறு போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.

அதன்படி, கும்மிடிப்பூண்டி மாநெல்லூர் காந்திநகர் பகுதியில் புயல் மழையால் பழங்குடியின பகுதியை சேர்ந்த 50 வீடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அரசு பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். அவர்களை சந்தித்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஆறுதல் கூறி, உணவு, பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்டுகளை வழங்கினார்.மேலும், மழை வெள்ளம் தேங்கிய கோட்டக்கரை அண்ணா நகர், தேர்வழி, குருவியகரம், ரெட்டம்பேடு பகுதிகளில் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், பல்வேறு தங்கும் மையங்களுக்கு சென்ற எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் அப்பகுதி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்ய உத்தரவிட்டதோடு, நீர் நிலைகளை ஆய்வு செய்தார். அப்போது கும்மிடிப்பூண்டியில் தாமரை ஏரியில் மழை வெள்ளம் பெருகி திருவள்ளூர் நகரில் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில் ஏரி நீரை கால்வாய் வெட்டி குடியிருப்புகள் பாதிக்காதவாறு நடவடிக்கை மேற்கொண்டார்.

Tags : Gummidipoondi ,MLA ,DJ Govindarajan , Security Camp, Relief, Gummidipoondi MLA, DJ Govindarajan
× RELATED எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன்,...