ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் தாமேலேரிமுத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதற்காக தனியார் ஏஜென்சி ஊழியர்கள் வந்தனர். சிறிது நேரத்தில் பணத்தை நிரப்பி விட்டு கவனக்குறைவாக ஒரு பையில் கட்டுக்கட்டாக பணத்தை வெளியில் விட்டு சென்றுள்ளனர். அதன்பின்னர் அந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த வெற்றி குமார் என்ற வாலிபர் அங்கு ஒரு பை இருந்ததை கண்டார். அதனை திறந்து பார்த்தபோது கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அந்த பையை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அமர் குஷ்வாகாவை சந்தித்து ஒப்படைத்தார். அதில் சோதனை செய்தபோது ரூ.4 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை ஒப்படைத்த வெற்றிகுமாரை கலெக்டர் பாராட்டினார். அதேநேரத்தில் கவனக்குறைவாக பணத்தை விட்டு சென்ற ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.